உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மேற்படி தேர்தலை எதிர்கொள்வதற்கான மொட்டு கட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்படி தகவலை வெளியிட்டார்.
” இலங்கையிலுள்ள மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. மொட்டு சின்னத்தில் களமிறங்கவே எதிர்பார்க்கின்றோம். எனினும், வடக்கு, கிழக்கில் சிறு மாற்றம் வரலாம்.
பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு நடத்திவருகின்றோம். எனினும், இவ்விரு மாகாணங்களிலும் சில இடங்களில் மொட்டு சின்னத்தில் வருவோம். ஏனைய மாவட்டங்களில் மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்குவோம்.” – என்றார்.
