Homeஉள்நாடுமலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!

மலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!

மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் வீட்டுத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும். அதேபோன்று பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கும் எமது அரசாங்கம் கம்பனிகளுடன் கலந்துரையாடி 1,700 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த வரவு செலவு திட்டமாகவே இந்த முறை வரவு செலவு திட்டத்தை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, மேற்கு மலையகம் என அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியதான வரவு செலவு திட்டமாகும்.

அதேநேரம் நாட்டின் எதிர்கால சந்ததியினரை வலுப்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளை பலப்படுத்தும் பல வேலைத்திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியினர் போஷாக்குடைய சந்ததியினராக வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு உணவு, பாலூட்டும் தாய்மாருக்கான திரிபோஷா திட்டத்தை மேன்படுத்துவதற்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான பாரியளவில் நிதி ஒதுக்கி இருக்கிறது. குறிப்பாக நன்கடத்தை நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் பாேக்குவரத்துக்கு தனியான வாகனம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மலையக வைத்தியசாலைகளை தேசிய நீராேட்டத்துடன் இணைப்பதாக நாங்கள் எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்திருந்தோம்.அதன் பிரகாரம் இந்த வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மலையத்தில் காணப்படும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு உட்பட அங்கு காணப்படும் மனிதவள மற்றும் பெளதிக வள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. மலையக மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் 83 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களிலும் மலையக மக்களின் வீட்டுத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் அது முழுமைப்பெறவில்லை. அதனால் இந்த மக்களின் வீட்டுத்திட்ட வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். மலையக தமிழ் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மலையக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு கொழும்புக்கு வந்து வீடுகளிலும் கடைகளிலும் தொழில் செய்யும் கலாராத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு முறையான தொழில் பயிற்சி வழங்கி அவர்களையும் தொழில் உட்பத்தியாளர்களாக்க வேலைத்திட்டம் அமைத்துள்ளோம்.

மலையக பிள்ளைகளின் கல்வி திட்டத்தை அபிவிருத்திக்காக ஸ்மாட் வகுப்பறைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கும் எமது அரசாங்கம் கம்பனிகளுடன் கலந்துரையாடி 1,700 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular