மீகொடை, அரலிய தோட்டப் பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” என்று அழைக்கப்படும் அமில கொஷான் குணரத்ன உட்பட மூவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மாத்தறை நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி ஒன்று பிரபல இசைக்கலைஞரிடம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து, மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பிரபல இசைக்கலைஞரின் வீட்டை நேற்றைய தினம் சோதனையிட்ட போது துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” என்பவரின் மெனேஜரும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேக நபர்கள் மூவரும் மாத்தறை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
