2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவு வரை மட்டுமே இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாடசாலை விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் திணைக்களம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இணையவழியில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாகும். தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் https://www.onlineexams.lk/eic ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி நீட்டிக்கப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
