இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமான வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ என அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
சமஸ்த லங்கா சாசனாரக்ஷக மண்டலத்தின் வழிகாட்டுதலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் வெசாக் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான அரச வெசாக் விழா மாத்தறை மாவட்டத்தின் திஹகொடை பகுதியில் அமைந்துள்ள மிதெல்லவல விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் வெசாக் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பில் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த காலங்களில் சில இடங்களில் பேய் மாளிகைகள், ஒழுங்கற்ற நடன நிகழ்ச்சிகள் போன்றவை வெசாக் நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறான பொருத்தமற்ற அம்சங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அல்லது முழுமையாக தவிர்க்குமாறும் வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெசாக் நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து பொலிஸாருக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
