பண்டாரவளை பகுதியில் இபோச பஸ்ஸொன்று பயணித்துக்கொண்டிருக்கையில் சில்லு திடீரென முறிந்து கழன்றுள்ளது. எனினும், தெய்வாதீனமாக பாதிப்பு எதுவும் இன்றி பயணிகள் தப்பியுள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை டிப்போவுக்குரிய குறித்த பஸ், இன்று காலை நெலுவ செஞ்ஜோமிஸ் கீழ் பிரிவில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெருக்கமான வளைவுகளையும், பாரிய பள்ளதாக்கையும் உடைய குறித்த பகுதியூடாக பஸ் பயணிக்கையில், திடீரென சில் முறிந்தமை பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் என பலரும் பயணித்துள்ளனர்.
குறித்த வீதி ஆபத்தானது என்பதால், பயணிகள் மயிரிழையிலேயே உயிர்தப்பியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
எனவே, பஸ் தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அது பயணத்துக்கு ஏற்றவகையில் உள்ளதா என்பதை சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் டிப்போ அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ராமு தனராஜா
