ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று (24) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்த அமர்வில் தெளிவுபடுத்தப்படவுள்ளன.இதில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட உயர்மட்டக் குழு,நேற்று (23) ஜெனிவாவுக்குப் புறப்பட்டது. எதிர்வரும் (28) வரை இலங்கையின் இந்த உயர்மட்டக் குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
அத்துடன், நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் பிரத்தியேகமாக சந்தித்து இலங்கைக் குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்கவும் தீர்மானித்துள்ளது.
மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் நாட்டுக்கு எதிரான 51 | 1 நகல் வடிவை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகி உள்ளதால், இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர உறுப்புரிமைகளை கொண்ட சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
