அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்:
“அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் தொடர்புபட்ட பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அந்த நபர்கள் சிறுவர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழைப் பெறுவதன் அவசியத்தை அமைச்சரவைப் பத்திரம் மூலம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். குறிப்பாக, அரச சேவையில் நுழையும் சந்தர்ப்பத்தில் சிறுவர்களுடன் தொடர்புடைய, சிறுவர்களை அணுகக்கூடிய பணிகளைச் செய்பவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக அல்லது குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே நாங்கள் முக்கியமாகப் பார்ப்பதாகும். அதனால் அந்தச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதேபோல் அரச சேவையில் உள்ளவர்களும் தொடர்ச்சியாகத் தங்களது சேவை இடைநிலைகளின் போதும் (Service Efficiency Bar), சம்பள உயர்வுகளின் போதும் அந்தச் சார்ந்த காலப்பகுதிகளுக்கான சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவர்கள் அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லர் என்பதற்கான சான்றிதழ் அவசியமாகும். எனவே, ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்லும்போது இதுபோன்ற விடயங்கள் நமக்கு அவசியமாகின்றன.” என்றார்.
