கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதைத் தடுக்கும் வகையில், புகையிரத திணைக்களம் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிடும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதன் மூலம் புகையிரத சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அதிகாரம் புகையிரத பொது முகாமையாளர், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகையிரத பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
