வடக்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வனப் பாதுகாப்புப் பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோதே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஆறு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஏழு பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்புரு காவல்துறைத் தலைவர் டேவிட் என்கோரோய், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக நேற்று (19) இரவு உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என அமெரிக்க வெளியுறவுத் துறையும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் முழுமையான அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமியைச் சேர்ந்த 55 வயதான ஜோஸ் சுவாரெஸ் உயிரிழந்தவர்களில் ஒருவர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோஸ் சுவாரெஸ், NBCUniversal நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சி வலையமைப்பான டெலிமுண்டோவின் நிலையங்களுக்கான தலைவராகவும் பொது மேலாளராகவும் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபிக் ஏர் கென்யா இரண்டு ஹெலிகாப்டர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் Eurocopter EC130 B4 வகையைச் சேர்ந்தது என கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
