HomeTop newsகொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம்...

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் 

“டிஜிட்டல் மயமாக்கல்” மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங்களில் வங்கி அட்டைகள் (POS இயந்திரங்கள்) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, ஜூலை 02, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பதிவாளர் பிரிவு மற்றும் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரப் பிரிவு ஆகியவற்றில் POS இயந்திரங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர், அடையாள நிமித்தமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை வங்கியின் (BOC) நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக, மக்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும் சந்தர்ப்பங்களில் கிரெடிட் (Credit) மற்றும் டெபிட் (Debit) அட்டைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தற்போதைய உலகில் வேகமாக இடம்பெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், இந்த முறையின் மூலம், சேவை பெறுநர்கள் பணத்தை எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் தமக்குத் தேவையான சேவைகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய POS கட்டண முறையினால் மக்கள் பெறக்கூடிய நன்மைகளாக,

பண நோட்டுக்களை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி, வங்கி அட்டைகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு. பரிவர்த்தனைகளை மிக விரைவாக முடிக்க முடிவதால், மக்கள் சேவை பெறுவதற்குச் செலவாகும் நேரம் குறைதல். பெரும் தொகைப் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாததால், பண மோசடிகள் மற்றும் பணம் காணாமல் போகும் அபாயங்கள் குறைதல். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குத் தாராளமாகப் பங்களிப்புச் செய்தல். அனைத்து பரிவர்த்தனைகளையும் கணக்காய்வு செய்வதற்கு வசதியாகக் கிடைப்பதனால், அரசாங்க வருமானம் சரியாகப் பதிவு செய்யப்படுதல்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் சேவை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இலங்கையின் அரச சேவையில் நிதி நிர்வாகம் மிகவும் வெளிப்படையான அதே நேரத்தில் மக்கள் நேயமிக்கதாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, மேல் மாகாண பிரதம செயலாளர் கே. பி. பிரதீப் யசபாலன, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட பதிவாளர் நாயகம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், திணைக்களத் தலைவர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular