கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கி நேற்று இரவு புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, யு.எல். 606 (UL 606) என்ற விமானத்தின் ஒரு இயந்திரப் பகுதியில் பறப்பின் போது மின்னல் தாக்கியுள்ளது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சம்பவத்துக்குப் பின்னர், பயணிகளுக்காக மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவர்கள் மெல்போர்ன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், இந்தச் சம்பவம் காரணமாக விமானப் பயணத்தில் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலான தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அவசரத் தரையிறக்கத்தின் போது பயணிகள் எவருக்கும் காயமோ, விமானத்திற்கு சேதமோ ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் தொழில்நுட்ப நிலை தொடர்பான மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
