சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.
தன் மீதான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரியே அவர் இவ்வாறு உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு அநாகரிகமாக மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சிலவற்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், என்ன தடைகள் ஏற்பட்டாலும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
இந்த சத்தியாக்கிரகத்தில் இணைந்துகொண்ட சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் அனுராதா யஹம்பத் குறிப்பிடுகையில், சலே விடுவிக்கப்படும் வரை இந்த சத்தியாக்கிரகம் தொடரும் என்றும், இது நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினருக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சுரேஷ் சலே தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிடுகையில், சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தின் கீழ் உள்ள ஒரு விடயமாகும் என்பதால் யாரும் பதற்றமடையத் தேவையில்லை எனக் கூறினார்.
நீதிமன்றத்தின் மூலம் இது முறையாகத் தீர்க்கப்படும் என்றும், யாருக்கு எதிராகவும் அரசாங்கம் பழிவாங்கும் நோக்குடன் செயல்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
