அனைத்து பிள்ளைகளும் சமமான கல்வித் தரத்தை அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் ‘ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமாக, தரமான மற்றும் சமமான கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் உறுதிப்படுத்துவது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
அதற்காக துல்லியமான தரவுகள், பொருத்தமான கொள்கைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய இடம்பிடிப்பதாகவும், மாறிவரும் உலகிற்கு ஏற்ப முன்னேறுவதற்கும், அரச சேவைகளை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் அது அவசியமானதாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
