HomeTop newsரங்க ராஜபக்ஷ மரணம் - தானாக ஏற்படுத்திய வெட்டுக்காயங்களே காரணம்

ரங்க ராஜபக்ஷ மரணம் – தானாக ஏற்படுத்திய வெட்டுக்காயங்களே காரணம்

பொதுப் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று நால்வர் அடங்கிய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி குழுவின் தலைவர், விசேட சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார இன்று (03) குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரங்க ராஜபக்ஷ பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது இறந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்டோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.

இதன்போது சாட்சி விசாரணையை வழிநடத்திய வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண, இறந்தவரின் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் மற்றும் உடற்கூறியல் பின்னணி குறித்து மருத்துவ ரீதியாக கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, “மேற்கத்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட சில நரம்புகள் எனக் கூறப்படும் உடலுறுப்பு எதுவும் இல்லை என்றும், இது குறித்து ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்களுடனும் கலந்துரையாடியதாகவும்” தெரிவித்தார். மேலும், இந்த உடலை மிக நுணுக்கமாக பிரேத பரிசோதனை செய்த நான்கு விசேட வைத்தியர்களும், இவை அவராகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் என்றும், அதிலிருந்து ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்றும் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

வழக்கு விசாரணையின் போது, இறந்தவரின் ஆடைகள், செருப்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்தியர் அடையாளம் காட்டியதுடன், காயமடைந்த இடங்களின் புகைப்படங்கள் நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், இரசாயன பகுப்பாய்வறிக்கை கிடைத்த பின்னர், அதன் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 30வது பிரிவின் கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க, வழக்கை மீண்டும் வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular