வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்கும் மத மரபுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து, போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அலட்சியமாக அல்லது அபாயகரமாக வாகனங்களை இயக்குதல், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டிகளை செலுத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070-4755600 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது 119 மற்றும் 188 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ தகவல் வழங்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
