Homeஉள்நாடுஅதிகரிக்கும் கடன் சுமை, வீழும் ரூபாய் மதிப்பு - அரசிடம் கேள்விகளை அடுக்கிய சஜித்

அதிகரிக்கும் கடன் சுமை, வீழும் ரூபாய் மதிப்பு – அரசிடம் கேள்விகளை அடுக்கிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரூபாயின் மதிப்பு சரிவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று (19) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நிலையான விதி 27(2)-இன் கீழ் உரையாற்றிய அவர், நாடு தற்போது கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

பேரியல் மற்றும் நுண்ணியல் பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் உத்திசார் அணுகுமுறை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை நிலைப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, அவர்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நிவாரண திட்டங்கள் குறித்து அரசாங்கம் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளை, பொதுமக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமையை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.

வேளாண்மை, சேவை மற்றும் தொழில்துறை துறைகள் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விபரங்கள் கோரினார்.

மேலும், மாவட்ட வாரியான வறுமைத் தரவுகள் மற்றும் தற்போதைய வறுமைக் குறியீடுகள் இன்றைய வாழ்க்கைச் செலவினை உண்மையாக பிரதிபலிக்கின்றனவா என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

“இந்த நாட்டின் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்,” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular