மறைந்த கபில சந்திரசேன அவர்களின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணியளவில் பொரளை பொது மயானம் பகுதியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அவர், கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த 8 ஆம் திகதி காலை, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையை முன்னெடுக்க கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட வைத்தியக் குழு நியமிக்கப்பட்டது.
பசந்த அமரசேன வழங்கிய நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரேதப் பரிசோதனை நேற்று (09) காலை கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் நடத்தப்பட்டது.
இதன்போது, மேலதிக ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்காக அவரது உடற்பாகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
