Homeஉள்நாடுஅரசின் நிர்வாகத் தோல்வியால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்!

அரசின் நிர்வாகத் தோல்வியால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்!

அரசின் திட்டமிடப்படாத மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

“மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எச்சரித்தபோது, அரசு அதைக் கேலி செய்தது. ஆனால், அந்த எச்சரிக்கை விடுத்து 12 நாள்களுக்குள்ளேயே மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. முறையான ‘மூலோபாய திட்டமிடல்’ அரசிடம் இல்லாததே இதற்குப் பிரதான காரணமாகும்.

ரஷ்யாவுடனான நேரடி இராஜதந்திர உறவுகள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் வழங்கிய ஆலோசனைகளை அரசு ஆரம்பத்தில் நிராகரித்தது. தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்ட பின்னரே ரஷ்ய தூதுவரைச் சந்திக்க முற்படுகின்றனர். அதேபோல், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியும் தரமற்றது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் 135 மெகாவோட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுமையை இறுதியில் மின் நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது.

எரிபொருளுக்கு கியூ.ஆர். முறைமை கொண்டுவரப்பட்டதைப் போல, அரசின் இப்போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் விவசாயிகளின் உரங்களுக்கும் கியூ,ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு, எவ்வித முன்னாயத்தமும் இன்றி நாட்டை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றது. எதிர்க்கட்சி வழங்கும் நல்ல ஆலோசனைகளைக்கூட ஆணவத்தால் நிராகரிக்கின்றனர். அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொய்களைப் பரப்புவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர்கள் காட்டவில்லை.” – என்றார்.

டித்வா சூறாவளி பாதிப்பின் பின்னர் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு கோரியபோதும், அதனை ஜனாதிபதி உதாசீனம் செய்தார் என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, அரசியல் பழிவாங்கல்களால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular