Homeஉள்நாடுயாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்!

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்!

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது,

“ சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

அதன்பின்னர் மேற்படி கும்பல் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அதில் ஒரு வீடு தீ பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவையும் தீக்கிரையாகியுள்ளது.

அதனை தொடர்ந்து மீசாலை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த குறித்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது.

அங்கிருந்து மற்றுமொரு வீடொன்றில் புகுந்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொறுக்கியுள்ளது.

குறிப்பிட்ட சில மணி நேரத்தினுள் தமது ஊருக்குள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு தீ வைத்ததை அறிந்து ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை பலர் தப்பி சென்ற நிலையில் நால்வர் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

வன்முறை கும்பல் தப்பி செல்லும் போது விட்டு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பவற்றையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாரிடம் தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நால்வரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் வாள்கள் , கொட்டான்கள் என்பவற்றையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular