Homeஉள்நாடுகடைசி ஓவர்வரை போராடி தோற்றது நெதர்லாந்து!

கடைசி ஓவர்வரை போராடி தோற்றது நெதர்லாந்து!

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து அச்சுறுத்தியது.

‘குரூப்-ஏ’ பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டன. இலங்கையின் கொழும்பில் இன்று (பிப்.7) காலை 11 மணி அளவில் இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. நெதர்லாந்து அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நெதர்லாந்து தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 37 ரன்கள் எடுத்தார். லீட் 30 மற்றும் மைக்கேல் லெவிட் 24, கோலின் ஆக்கர்மேன் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவாஸ், அப்ரார் அகமது, சயிம் அயூப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷாஹீன் அஃப்ரிடி 1 விக்கெட் எடுத்தார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். இதில் ஃபர்ஹான் 47, சயிம் அயூப் 24 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். ஃபர்ஹான் ஆட்டமிழந்ததும் உஸ்மான் கான் (0), பாபர் அஸம் (15), முகமது நவாஸ் (6), ஷதாப் கான் (8) ஆகியோர் வெளியேறினர். நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மெக்ரான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். லோகன் வான் பீக் மற்றும் க்ளென் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

19-வது ஓவரில் 3 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை ஃபாஹிம் உறுதி செய்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஃபாஹிம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் ஓ’தாவுத் நழுவவிட்டார்.

இறுதியாக 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஃபாஹிம் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular