Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இருட்டடிப்பு செய்யவே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இருட்டடிப்பு செய்யவே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளிப்படுத்துகின்றது – இவ்வாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் பிரதி அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறினார்.

உயிர்த்தஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் முறையாக இடம்பெற்றுவரும் விசாரணையை மூடிமறைக்கும் நோக்கில் எதிரணிகளால் பெரும் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இந்தச் சதிகளில் அரசாங்கம் சிக்காது.

உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாதவேளை, பிரதி பாதுகாப்பு அமைச்சரின் பெயர் சஜித் தரப்புக்கு நினைவுக்கு வரவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றில் கூட இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தற்போது அவரின் பெயர் திடீரென நினைவுக்கு வந்தமை ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட ஒருவரை இதனுடன் சஜித் தரப்பு தொடர்புபடுத்த முற்படுவது ஏன்? உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மற்றும் உண்மையான குற்றவாளிகளை மூடிமறைக்கும் தேவைப்பாடு எதிரணிக்கு இருப்பது இதன்மூலம் தெரிகின்றது- என அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular