Homeஉள்நாடுதமிழரசுக் கட்சியை முடக்க முயற்சி!

தமிழரசுக் கட்சியை முடக்க முயற்சி!

யாழ். குடாநாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கட்சி, தமிழர்களின் தேசியக் கட்சியான தமிழரசை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கறுப்பு ஜூலை நிகழ்வானது வருடந்தோறும் கட்டாயமாக நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும். எமது இளைஞர்களுக்கு இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றமையைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதனூடாக இளைஞர்கள் எமது இனத்திற்கு நடைபெற்ற கொடூரமான படுகொலைகளை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

இருப்பினும் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் துரதிஷ்டவசமாக நாம் நீதி கேட்பது இலங்கை அரசிடம்தான். இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக சர்வதேச விசரணை வேண்டும் எனவும், சர்வதேச மேற்பார்வை வேண்டும் எனவும், சர்வதேச அழுத்தம் இருக்க வேண்டும் எனவும், சர்வதேசம் தலையிட வேண்டும் எனவும் எத்தனை முறை அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும், இலங்கை அரசு ரோம் சட்டத்தில் கைச்சாத்திடவில்லை என்பதைக் கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதை தொடர்ச்சியாகக் கூறி வருகின்றார்கள். தமிழரசுக் கட்சியானது தொடர்ந்தும் சர்வதேச விசாரணையைக் கோரினாலும் இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.

முன்னர் இருந்த அரசுகள் இந்தப் படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின் நின்றன. ஏனென்றால் அவர்களும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலே இவற்றிக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் அவர்கள் ஈடுபாடில்லாமல் ஆட்சியைப் புரிந்தனர். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தும் மாறி மாறி வந்த் அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி. கட்சி 2024 ஆம் ஆண்டு வரை எந்தக் காலப் பகுதியிலும் ஆட்சி செய்யாமையின் காரணமாக நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை பல தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான முதலாவது சந்தர்ப்பத்தை அந்த அரசுத் தரப்பினர் தவறவிட்டுள்ளார்கள்.

அண்மையில் நாட்டிற்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் தமிழரசுக் கட்சி சர்வதேச விசாரணை தேவை என்று கூறிய போது, இலங்கை அரசு உள்நாட்டு பொறிமுறையினூடாக மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதைக் கையாளப் போகின்றோம் என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவினால் சொல்லப்பட்ட ரி.ஆர்.சியினைத் தான் பயன்படுத்த போகின்றார் என அமைச்சர் விஜித ஹேரத் சொல்லியுள்ளார். என்.பி.பி. அரசினூடாகவும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.

நீதியை வழங்குவதன் ஊடாக எந்தவொரு தேசிய மக்கள் சக்தி கட்சியினரும் பாதிக்கப்படப்போவதில்லை. அப்படியிருந்தும் அதனை மறுக்கின்றார்காள் என்றால் இவர்களும் பெரும்பான்மை இனத்தைப் பாதுகாப்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சியை உடைக்க வேண்டூம் என்றும், பலவீனமாக்க வேண்டும் எனவும் சில தமிழ்க் கட்சிகள் உழைக்கின்றன. யாழ். குடாநாட்டுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள் வடக்கு, கிழக்கு மக்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாக எப்படி பேச முடியும்? தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே இவர்கள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றார்கள். இதனைத் தமிழரசுக் கட்சியினர் முன்னெடுக்கின்றார்கள். தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியுடன் உள்ளார்கள் என்ற செய்தியைச் சொல்லவும் வருடந்தோறும் நினைவேந்தல்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் இந்நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழக்கூடாது என்றால் – நிரந்தரமான – மீளப் பெற முடியாத – அரசியல் தீர்வொன்று வேண்டும். அரசியல் தீர்வு விடயத்திலும் இந்த அரசு பின்வாங்குகின்றது என்பதைத்தான் சொல்ல வேண்டும்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு கூட அரசு இழுத்தடிப்பு செய்கின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வை ஒரு புதிய அரசமைப்பினூடாக கொண்டு வருவதற்கு காலதாமதமானாலும் கூட, உடனடியாகச் செய்யக்கூடியாக மாகாண சபைத் தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்கின்றது. அரசு செய்யத் தவறியதனால் நான் நாடாளுமன்றத்துக்குச் சட்டமூலம் கொண்டு வந்தபோது அது சாணக்கியனுடைய சட்டமூலம் என்று நீங்கள் நினைத்தால் அந்தச் சட்டமூலத்தை அரசின் சட்டமூலமாக மாற்றி நடைமுறைப்படுத்துமாறும் கூறியுள்ளேன். ஆனால், இந்த அரசும் மாகாண சபை முறைமையைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்துச் செயற்படுத்துகின்றது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular