மும்பையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பதவி வழி தற்காலிகத் தூதுவர் (Actg. Consul General) ஷிராணி ஆரியரத்ன, 2025 மே 28 அன்று மும்பை சயாத்ரி விருந்தினர் இல்லத்தில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் நெறிமுறை மற்றும் சந்தைப்படுத்தல் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் அமைச்சின் முதன்மைச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (AIAI), உலக வர்த்தக மையம் (WTC), இந்திய சர்வதேச வணிக சபை, இந்திய இறக்குமதியாளர்கள் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை, மகாராஷ்டிரா வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பதவி வழி தற்காலிகத் தூதுவர், இலங்கையுடனான சாத்தியமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கக்காட்சி ஒன்றை வழங்கியதுடன், அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலையும் நடத்தினார்.
“இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தகத்திற்கான வளர்ச்சிப் பகுதிகள் மற்றும் புதிய வாய்ப்புகள்” எனும் கருப்பொருளின் கீழ் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் உள்ளூர் வணிக சமூகம் மற்றும் பங்கேற்ற சபைகளின் உறுப்பினர்களுக்கிடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை ஏற்றுமதிகளுக்கான சந்தை வாய்ப்புகளை எளிதாக்குதல், வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்த்தல், சுங்கத் தீர்வை மற்றும் மாதிரிச் சோதனை செயல்முறைகளை விரைவுபடுத்துதல், மகாராஷ்டிராவிலிருந்து இலங்கைக்கு வர்த்தகத் தூதுக்குழுக்களை ஊக்குவித்தல், இலங்கை நகரங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையில் நடைபெறும் கண்காட்சிகளில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல் மற்றும் இந்திய முதலீடுகளை இலங்கையில் அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அமைச்சரின் ஒத்துழைப்பைத் தூதுவர் கோரினார்.
மகாராஷ்டிரா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் அமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் இலங்கை வர்த்தக சபைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்ததுடன், தூதுவரால் பகிரப்பட்ட புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிப் பகுதிகள் குறித்த தகவல்களைத் தமது உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இலங்கைக்கு வணிகத் தூதுக்குழுவொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஆர்வம் காட்டி, பங்கேற்ற வர்த்தக சபைகளிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.
இலங்கைத் துணைத் தூதரகம்
மும்பை
