Homeஉள்நாடுகொழும்பை ஆள கட்சிகள் தீவிரம்!

கொழும்பை ஆள கட்சிகள் தீவிரம்!

கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதி மேயரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் யாரை நியமிப்பது என்ற தீர்மானம் இன்றைய தினத்துக்குள் அறிவிக்க இருப்பதாகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை அந்ததந்த கட்சிகளால் தலைவர், மேயர் தெரிவு செய்யப்பட்டு நேற்று சட்ட ரீதியாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதேநேரம் எந்த கட்சியினாலும் பெரும்பான்மை பெற்றுக்காெள்ள முடியாமல் போன சபைகளின் ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், கொழும்பு மாநகர சபையிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் பிரகாரம் கொழும்பு மாநகர சபையில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் அதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆளும் தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் மாநகர சபையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியைச்சேர்ந்த மேயர் ஒருவரை தெரிவு செய்துகொள்ள தேவையான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி, உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இந்தமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற, நீண்ட காலம் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் அதன் குழுக்களில் தலைவராகவும் இருந்துவரும் ரீஸா சரூக்கை மேயராக தெரிவு செய்ய எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. அதேநேரம் கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அடுத்த படியாக அதிக ஆசனங்களை பெற்றுக்காெண்டிருப்பது ஐக்கிய தேசிய கட்சியாகும். அதனால் மாநகர சபையின் பிரதி மேயராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி மேயராக யாரை பெயரிடுவது என இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், அதுதொடர்பில் கலந்துரையாடி இன்றைய தினம் அறிவிக்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular