Homeஉள்நாடுசெம்மணியில் 3 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

செம்மணியில் 3 அடி ஆழத்தில்
மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

பாரிய புதைகுழியாக இருக்கலாம் என்று அச்சம்
மழை காரணமாக அகழ்வுப் பணி இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில்,  நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  இரண்டாம் நாள் அகழ்வின்போதே இந்த மனித எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

முழுமையான என்புத் தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் பாரிய மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular