சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் பெரிய வெள்ளிக்கிழமை (18) இரவு நடைபெற்ற 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கம்பளை விக்ரமபாகு வித்தியாலய வீராங்கனை தருஷி அபிஷேகா பேமசிறி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார்.
6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
அத்துடன் 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை 2015ஆம் ஆண்டில் 400 மிற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீராங்கனை யாமனி துலாஞ்சலி வென்றுகொடுத்திருந்தார்.
பெரிய வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 14.86 செக்கன்களில் ஓடி முடித்து தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
போட்டியின் கடைசி 200 மீற்றர்களில் முன்னிலை அடைந்த தருஷி அபிஷேகா ஒரு செக்கன் வித்தியாசத்தில் சீன வீராங்கனை யே மெல்லிங் (2:15.92 வெள்ளிப் பதக்கம்) என்பவரை பின்தள்ளி அபார வெற்றியீட்டினார்.
அப் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை நயோமி மார்ஜோரி சீசர் (2:17.87) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
