வல்லரசு நாடுகளுக்கிடையில் அதிகார போட்டி வலுத்துள்ள சூழ்நிலையில், இலங்கையானது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது மிகவும் ஆபத்தானதாகும் எனவும், இது தொடர்பில் சீனா நிச்சயம் அதிருப்தி அடையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவுடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும், பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஒப்பந்தம் உள்ளது எனவும் எமக்கு அறியக்கிடைத்தது. இவை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என காத்திருந்தோம்.
எனினும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தையும், மக்களையும் அரசாங்கம் இதுவரை (நேற்று) தெளிவுபடுத்தவில்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகள் என்னவென்பது எமக்கு தெரியவர வேண்டும். இலங்கையென்பது அணிசேரா நாடாகும். எனவே, ஒரு நாடுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் அது வெளிவிவகாரக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் விரிசல் உள்ளது. குவாட் பாதுகாப்பு கூட்டணியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கின்றது. குவாட் என்பது சீனாவுக்கு எதிரான கூட்டணியாகவே கருதப்படுகின்றது. எனவே, இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் சீனா அதிருப்தி அடையக்கூடும்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. எனவே, இலங்கை அதற்கும் கட்டுப்பட வேண்டி ஏற்படக்கூடும்.
சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் நாடுகளாகும். எனவே, இப்படி செய்வதானது இலங்கையை நன்றி மறந்த சமூகமாக காண்பிக்கக்கூடும்.
இன்று வல்லரசு நாடுகளுக்கிடையில் போட்டி உள்ளது. எனவே, ஒரு அணியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது ஆபத்தாகும். இலங்கையின் இறையாண்மையென்பது மிக முக்கியமாகும்.” – என்றார்.
