அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பக்கமே நிற்பதாகவும், குறுகிய அரசியல் நோக்கில் செயற்பட தயாரில்லை எனவும் அவர் கூறினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க 44 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் பாரிய பொருளாதார பிரச்சினையில் நுழைவாயிலில் நாம் இருக்கின்றோம்.
கொரோனா நெருக்கடியின்போதும் இப்படியான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவ்வேளையில் ஜே.வி.பி. உள்ளிட்ட எதிரணிகள், நாட்டை மூடுமாறு வலியுறுத்தின.
தொழிற்சாலைகளை மூடுமாறு கூறின. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதை நிறுத்துமாறு வலியுறுத்தின. அந்நிய செலாவணியை அனுப்ப வேண்டாம் என பணியாளர்களுக்கு கூறப்பட்டது.
அதாவது நெருக்கடியில் இருந்து நாடு மீண்டழெ உதவுவதற்கு பதிலாக, நாட்டை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டு, நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்கின.
எனினும், நாட்டை நேசிக்கும் கட்சி என்ற வகையில் நாம் அவ்வாறு செயற்படபோவதில்லை. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.” – என்றார்.
