Homeஉள்நாடுஉள்ளாட்சி தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி சரியும்!

உள்ளாட்சி தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி சரியும்!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பெற்றுக் கொண்ட வாக்குகளை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இம்முறைத் தேர்தலிலும் எம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அமையும். 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல், 2019 ஜனாதிபதித் தேர்தல், 2020 பொதுத் தேர்தல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இதற்கு முன்னரும் இவ்வாறான முடிவுகள் பதிவாகியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறுமளவுக்கு புத்தி சுயாதினமற்றவர்கள் எமது கட்சியில் இல்லை. ஆனால் ஊழல், மோசடியற்ற எவரும் எம்முடன் இணையலாம். ஜே.வி.பி.யைத் தவிர வேறு எந்த கட்சியிலிருப்பவர்களுக்கும் அதற்கு வாய்யப்பளிக்கப்படும்.

தற்போது பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தின் மனித வளங்களே பாராளுமன்றத்திலுள்ளன. அவர்களால் சுயமாக செயற்பட முடியாது. பெலவத்த அலுவலகத்தின் கட்டளைகளுக்கமையவே செயற்படுவர். எனவே உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களையும் அவ்வாறு தெரிவு செய்து விட வேண்டாம். பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைப்பவர்களுக்கு வாக்களிக்காமல் மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடையவில்லை. அதேவேளை பிரிதொரு கட்சியுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் துரிதமாக நிறைவடையக் கூடியவையும் அல்ல. எமது பேச்சுவார்த்தைகள் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டதும் அல்ல. அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபை, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை இலக்காகக் கொண்டதுமாகும்.

எனவே பேச்சுவார்த்தைகளை அவசரமாக நிறைவு செய்யாது பொறுமையாக முன்கொண்டு செல்வோம். அதற்கமைய ஐ.தே.க.வில் சிலர் எம்முடன் இணையலாம். சிலர் அதனை நிராகரிக்கலாம். தற்போது எதையும் உறுதியாகக் கூற முடியாது. எவ்வாறிருப்பினும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. பெற்றுக் கொண்ட 68 இலட்சம் வாக்குகளை இம்முறை பெற முடியாது என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular