தமது இயலாமையை, பலவீனத்தை மூடி மறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ராஜபக்ச நாமத்தை பயன்படுத்திவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடக்கையில், நீதிமன்ற வளாகத்துக்கு வந்து மக்களை கொல்வதற்கு ராஜபக்சக்கள் முற்படுகின்றனர் என கதைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும் ஆளுங்கட்சி முயல்கின்றது எனவும் அவர் கூறினார்.
மக்கள் சந்திப்பில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தமக்கு ஏற்ற வகையில் அரசியல் நியமனங்களையும் அரசாங்கம் வழங்கியது. தமது அரசியல் மேடையில் இருந்தவர்களை பொலிஸில் பிரதான பதவிக்கு அமர்த்தினர். அமைச்சுகளின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை அரசாங்கத்தால் உறுதிபடுத்த முடியாமல்போயுள்ளது. ஆளுங்கட்சியால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தோல்வியடையும்போது, பழியை ராஜபக்சக்கள்மீது போடுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் மக்களை கொல்வதற்கு ராஜபக்சக்கள் முற்படுகின்றனர் என கதைகூற முயல்கின்றது. அப்படி செய்யமுடியுமா? அரசாங்கம் தற்போது பெயில் ஆகியுள்ளது. – எனவும் நாமல் கூறினார்.
