Homeஉள்நாடுஜனாதிபதி மலையகத் தமிழர் என விளித்தமை மகிழ்ச்சி!

ஜனாதிபதி மலையகத் தமிழர் என விளித்தமை மகிழ்ச்சி!

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. கடந்த காலங்களிலும் இவ்வாறு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் ஏதும் நடைமுறையில் சாத்தியமடையவில்லை. வரவு செலவுத் திட்ட உரையில் மலையகத் தமிழர்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டமை மகிழ்ச்சிக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறு பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அதிகாரபூர்வமாக தீர்மானங்களை அறிவித்தார்.இருப்பினும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.ஆகவே பரிந்துரைகள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களே மீண்டும் சொல்லப்படுகிறது. இது விசனத்துக்குரியது. பெருந்தோட்ட பகுதிகளில் வீடமைப்பு உட்கட்டமைப்புக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. பெருந்தோட்டத்துக்கு தனி வீடா, மாடி வீடா என்பது குறிப்பிடப்படவில்லை.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் வரவு செலவுத் திட்டத்தில் விரிவாக குறிப்பிடப்படாமை வருத்தத்துக்குரியது. இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்றார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular