HomeBig Storyமலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

மலையகத்தில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்துள்ளன. அவற்றை படிப்படியாக தீர்ப்பதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் கொண்டுவரப்பட்ட தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்துக்கு சுவீகரித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

76 வருடகாலம் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பெருந்தோட்டங்களுக்கு செய்ய முடியாத பல செயற்றிட்டங்கள் காணப்படுகின்றன. அந்த செயற்றிட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும்.

தோட்டங்களில் வீதிகள் மாத்திரம் அல்ல, பிரச்சினை. இன்னும் பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஏகாதிபத்தியவாதிகளால் மேற்கொண்டு சென்ற தோட்டத்துறைகளை அரசாங்கங்களினால் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனதால் தோட்டங்களை கம்பனிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம், இந்த தோட்டங்கள் தற்போது 24 கம்பனிகளிடமே இருக்கின்றன. தோட்டங்களை மாத்திரமல்ல, தோட்ட மக்களையும் சட்ட ரீதியிலோ சட்ட ரீதியாக இல்லாமலோ தோட்ட கம்பனிகளுக்கு சாட்டப்பட்டிருப்பது போன்றே இருக்கிறது.
அந்த மக்களின் அடிப்படை தேவைகள் எந்தளவுக்கு மீறப்பட்டிருக்கிறது என்றால், குடிசன புள்ளிவிபர திணைக்களம் மற்றும் சுகாதார துறையின் தரவுகளுக்கமைய அதிகமான மந்த போஷணை உள்ள மக்கள் தோட்ட மக்களாகும்.
தோட்டங்களில் வீதிகள் மாத்திரம் பிரச்சினை அல்ல. தோட்டத்தில் இருக்கும் ஒருவர் பொலிஸ{க்குச் செல்வதாக இருந்தால் தோட்ட கம்பனியிடம் கடிதம் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதற்கு கடிதம் எடுக்க வேண்டும். வேறு பிரதேசங்களில் இவ்வாறான பிரச்சினை இல்லை. அதனால் நாட்டின் பிரஜையாக அவர்களின் பிரஜாவுரிமை சரியாக உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. தோட்டங்களில் சிலருக்கு அடையாள அட்டை இல்லை. இன்னும் சிலருக்கு விவாக சான்றிதழ் இல்லை. மொத்தத்தில் தோட்டங்களில் வாழ்பவர்களுக்கு முகவரி ஒன்று இல்லை. வீடு இல்லை. காணி இல்லை. இவ்வாறு மலை போன்று பிரச்சினைகள் மலையக மக்களுக்கு இருந்து வருகிறது.

அதனால் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்னர் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தேவையான செயற்றிட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இருக்கிறோம். அவர்களின் உரிமைகளை முறையாக படிப்படியாக வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதன் முதல் கட்டமாக மார்ச் மாதம் நடுப்பகுதியில் கிளீன் சிறிலங்கா செயற்றிட்டத்தின் கீழ் மலையகத்தில் இருக்கும் 75 லயன் அறைகளை தெரிவு செய்து, அதனை நவீனப்படுத்தி கையளிக்கவிருக்கிறோம்.

அத்துடன் தபால் திணைக்களத்துடன் கலந்துரையாடி தோட்ட மக்களுக்கு முகவரி ஒன்றை வழங்க இருக்கிறோம். பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அதனை வழங்கவும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அந்த இடத்திலேயே அதனை வழங்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த வருடம் இந்திய அரசாங்கத்தின் உதவியில் பெருந்தோட்டத்தில் 5,700 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம். இந்த வீடுகளை கடந்த அரசாங்கத்தின் போன்று அல்லாமல் அரசியல் நோக்கத்திலோ உறவினர்களுக்கோ வழங்குவதில்லை. மாறாக, கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண் சரிவு இடம்பெறும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படும் லயன்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
மேலும், தோட்டங்களில் இருக்கும் வீதிகளை அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்வது இலகுவான விடயமல்ல. அது தொடர்பான ஒப்பந்தம் 2045 வரை இருக்கிறது. என்றாலும் அதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. படிப்படியாக கம்பனிகளுக்கு கீழ் இருக்கும் இந்த வீதிகளை அரசாங்கத்துக்கு கீழ் எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular