கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாவார். மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், தனது பிள்ளைகளின் மேலதிக கல்விக்காக குண்டசாலை பிரதேசத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், எரிவாயு வெடித்து தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அல்லது எவ்வித பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் தேடி பார்க்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.