வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் இதுவரையில் இடம்பெற்று வரும் பாரம்பரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாய, காணி, கால்நடை, நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) முற்பகல் விவசாய அமைச்சில் பதவியேற்றதன் பின்னர் அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் வறுமையை ஒழிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.