இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் புதிய டொலர் மாற்று முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவுவதற்கும் எதிர்க்கட்சி என்ற வகையில் தாங்கள் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒருபுறம் சமையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன. மறுபுறம் திரவ உரம் வெடிப்புக்குள்ளாகின்றது. நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி பூச்சியத்தை சந்தித்துள்ளது. நாட்டில் என்ன இடம்பெறுகின்றது என்பது தெரியவில்லை. விவசாய அமைச்சரால் செய்ய முடியாத விடங்களை இராணுவ தளபதியிடம் அரசு ஒப்படைக்கிறது.
நாளை மறுதினமாகும் போது எரிவாயு பிரச்சினைக்கு தீர்வில்லை என்று தெரிவித்து பந்துல குணவர்தன, லசந்த அலகியவன்னவுடைய பொறுப்புகளையும் இராணுவ தளபதியிடம் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மத்திய வங்கி ஆளுநா் அஜித் நிவாட் கப்ரால் அந்நிய செலாவணியை 3.5 பில்லியனாக அதிகரிப்போம் என்று கூறுகின்றாா். அந்த விடயத்தையும் முறையாக செய்யமுடியாவிட்டால் அதனையும் இராணுவ தளபதியிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
இறுதியில், நிதி அமைச்சிரினால் நிதி பிரச்சினைக்கும் பொருளாதார பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அவரது பொறுப்பும் இராணுவ தளபதியிடம் ஒப்படைக்கும் நிலையே உருவாகும். இது நகைப்புக்குரிய விடயமாகும். நாடு எதை நோக்கி பயணிக்கின்றது.
நாட்டின் நிலைமையை கேளிக்கூத்தாக்க வேண்டாம். அரசாங்கத்திற்கு உதவி வழங்க தயாராக இருக்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கு உதவுவதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் புதிய டொலர் மாற்று முறைமையை உடனடியாக நிறுத்த வேண்டும். அது தவறாகும். நாட்டை நெருக்கடிக்குள் தள்ளும். இந்த புதிய முறையினூடாக முதலீட்டாளர்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை வழங்குகிறீர்கள். வியாபாரிகளுக்கும் இதனூடாக பிழையான தகவல் வழங்கப்படுகின்றது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினாா்.
இதேவேளை, டொலரொன்றை ரூபாவுக்கு மாற்றும்போது விசேட சலுகையாக 10 ரூபா அதிகரிப்பதாக மத்திய வங்கி அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.