அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் இக்கட்டான காலங்களில் உறுவாவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், கடந்தகாலத்தில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் வலுவான தலைமைத்துவத்தின் பண்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதப் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொருளாதாரப் போரிலிருந்து காப்பாற்றினார்.
எனவே இத்தருணத்தில் அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்கும் எவரும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பார்கள். அதன்படி இம்முறை மாத்தளை மக்களின் ஆசியுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது ஆதரவை வழங்கி எனது கடமையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளேன்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் உருவாகிய கட்சி என்பதைக் கூற வேண்டும். நான் மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுகின்றேன். மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன். இல்லாவிட்டால் வீட்டுக்குச் செல்வேன்.
இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து சென்றிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள இரண்டு ஹொக்கி மைதானங்களும் புனரமைக்கப்பட்டு அடுத்த மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளன.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முழுமையான விளையாட்டுத்துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்த ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.