நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
நாட்டில் ஏற்றுமதி சார்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பை இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் இணைந்து செயற்படுத்தும் “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று (26) ரம்புக்கன பராக்கிரம மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக, தொழில்நுட்ப அமைச்சு “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030”,திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்காக பின்னவல மிருகக்காட்சிசாலை வளாகத்தில் இன்று(26) நடைபெற்ற நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவில் 07 புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
பின்னவல மிருகக்காட்சிசாலை வளாகத்தில் உள்ள DIGIECON காட்சிக் கூடத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்ததுடன், QR குறியீடு மூலமான கொடுப்பனவுகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இன்று இந்தியா, சீனா போன்ற நாடுகள் வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அவர்களின் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. நாமும் அந்த நிலையை அடைய வேண்டும். அதற்காக QR குறியீடு முக்கியமானது. இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கான தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எனவே இந்த திட்டம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள அனைருக்கும் இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளின் பொருளாதாரங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறேன். அதற்கு ரூபாயை வலுப்படுத்த வேண்டும். மேலும், நமது வெளிநாட்டு கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும்.
அதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறோம். நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் பட்சத்தில் நமது அந்நியச் செலாவணி அதிகரிக்கும். இத்தகைய அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலம் அந்த நாடுகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த 10 வருடங்களில் இந்த நாட்டில் நவீன பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என நம்புகின்றோம். இது கொழும்பில் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் கொண்டுச் செல்லப்படும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.