மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பல்வேறு தர நிலைகளில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவக் கல்லூரிகளாக மாற்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தொடர்பான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தேசிய தொழிற்கல்வி தகுதியை (NVQ) மறுபரிசீலனை செய்து சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய அவுஸ்திரேலிய தகுதி நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கையாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மின்சார இணைப்பு முறைமையையும் நில இணைப்பையும் ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று (18) நடைபெற்ற ‘2024 இலங்கை மனித மூலதன உச்சி மாநாட்டில்” (Sri Lanka Human Capital Summit) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரச துறை திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, நிதிச் சேவைகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகிய துறைகளில் மூலோபாய ஆற்றலுக்கு இந்த மாநாடு முன்னுரிமை அளிக்கும்.
நாம் முதலில் தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை செயற்படுத்தும் பல நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் தேவைக்கு அதிகமாகவே எம்மிடம் உள்ளன. அதுபோன்று அமைச்சுகளும் இருக்கின்றன. ஆனால் இந்தத் துறைக்கு, பாடசாலைக் கல்விக்குப் பிறகு, பொறுப்பான ஒரு நிறுவனம் தேவை.
நாடு முழுவதும் சுமார் 700 – 800 பயிற்சி மையங்கள் உள்ளன. சுமார் 300 அரச தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவை புதுப்பிக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படும்.
அதனைத்தான் நாம் செய்ய வேண்டும். பல்வேறு தரநிலைகளின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை, உயர் தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவக் கல்லூரிகளாக மாற்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கற்கைகள் தொடர்பான பட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். பின்னர் நாம் NVQ தகுதியை உயர்த்துவதற்கான பணிகளை ஆரம்பிக்கலாம்.
NVQ தகுதிகளை நாம் மறுபரிசீலனை செய்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டங்களை வழங்கும் அவுஸ்திரேலிய தகுதிகளின் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். அவுஸ்திரேலியாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆசியாவின் முன்னேறிய நாடுகளைப் பார்க்கும்போது, அவை அனைத்தும் தொழில்சார் தொழில்நுட்பக் கல்வி மற்றும் உயர்கல்வியில் தங்கள் மூலதனத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றன.
ஜப்பான், கொரியா, ஹொங்கொங், சிங்கப்பூர் என்று எடுத்துக் கொண்டால், அந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் அந்த நிலையை எட்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் அந்த நிலையை எட்டியுள்ளன.
மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான தளமாக நாம் மாறலாம். மேலும், இந்தியா, பங்களாதேஷ், இலங்கையை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கு மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். மேலும் அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.
இலங்கையின் கல்வி முறையைக் கட்டியெழுப்ப இந்த நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும். கல்வி வாய்ப்புகள் குறித்து 2021/2022 இல் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்கனவே ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
டீகின் பல்கலைக்கழகம், எடித் கோவன் பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை ஏற்கனவே இந்த நாட்டிற்கு வந்துள்ளன. இவ்வாறு, நம் நாட்டில் மேலும் சர்வதேச பல்கலைக் கழகங்கள் உருவாகி வருகின்றன. இத்துடன், அரச துறையில் பல புதிய இலாப நோக்கற்ற பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்யவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவற்றில் 04 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கியுள்ளன.
எனவே முதலில், தற்போதுள்ள முறைமையை மாற்ற வேண்டும். இரண்டாவதாக, கல்வி மற்றும் பயிற்சி முறையை வலுப்படுத்தத் தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.