தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.
காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய – ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.