பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், சட்டத்தின் முழு பலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி கடமையை நிறைவேற்ற, அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சியல்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.