மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை புதிய மெகசின் சிறைச்சாலைக்கு வந்தவுடன் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிருணிகாவுக்கு சிறைக் கைதிகளுக்கு வழங்கும் துணி வழங்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் R வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, மருத்துவ அறிக்கையைப் பெற சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்தார்.
இதன்படி, பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக காணப்பட்டார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நாளை மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.