ஆசிரியர்களும், அதிபர்களும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் போது, எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு அவர்களால் எவ்வாறு அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என சிந்திக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை இன்று (27) சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சேவையிலிருக்கும் சகலரும் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றும் அரசியல் சார்ந்தவர்களே இதில் பங்கெடுத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர் தொழிலுக்கும் களங்கம் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.
சிங்கள பாடசாலைகளுக்குள் மாத்திரமே இந்த பணிப்புறக்கணிப்பு காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம், தனியார் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போல நடைப்பெறுவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலையின் பாதுகாவலர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு அடுத்த வருடத்திலிருந்தே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அது குறித்து நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அதேபோல் ஏனைய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 3000 – 17000 வரையிலான சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வருடத்திலும் 10 000 ரூபா சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 13000-27000 வரையில் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏனைய அரச ஊழியர்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
இவ்வேளையிலும் தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. சிங்கள பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமே இவ்வாறான தொழிற்சங்கச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். எவ்வாறாயினும் சம்பள விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சரியான முறைமையொன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதோடு, அது குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.