இலங்கைக்குள் ஒமிக்ரோன் பிறழ்வு உள்நுழைந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸானது பல்வேறு வகையில் திரிபடைந்து பரவுகின்றது. இவை எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்புபெற சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுவது முக்கியமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபை அடையாளம் காண்பது தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென மரபணு பகுப்பாய்வு முறையொன்றை துறைசார் நிபுணர்கள் கையாண்டுள்ளனர்.
நாட்டுக்கு வருகைத்தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.