எதிர்வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் இந்திய தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பு நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புதன், வியாழன், சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் வானத்தில் தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு சில கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் எனவும், ஒரு சில கோள்களைப் பெரிய தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வானம் தெளிவாக இருந்தால் கடற்கரைப் பகுதிகளில் இதனைப் பார்க்க முடியும் எனவும், அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் 6 கோள்கள் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதாகவும் சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி ஒரு அரிய காட்சி வானில் அரங்கேற இருப்பதாக, சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.