கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் கப்பலை தங்கள் பொறுப்பின் கீழ் கையகப்படுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ், குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் உரிமையாளரான நிறுவனமும் தவறை ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கான நட்டஈட்டை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய கப்பலின் கப்டன் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.