கொவிட் தடுப்பூசி இரண்டையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் நோயாளிகளுக்காக, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மோல்னுபிரவீர் வில்லை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.