follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்கள் இறக்குமதி?

பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்கள் இறக்குமதி?

Published on

பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டுவந்த சம்பவம் குற்றவியல் விடயமொன்றாகத் தோன்றுவதால், அது தொடர்பில் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அண்மையில் ஆலோசனை வழங்கியது.

அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

சீஷெல்ஸிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த பழுதடைந்த மீன் கொள்கலன்களுடன் கூடிய கப்பல் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் கணக்காய்வு விசாரணையின் மூலம் தெரியவந்த விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் கூடிய போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

சீஷெல்ஸிலிருந்து தாய்லாந்து நோக்கி 102 மீன் கொள்கலன்களை (2700 மெட்ரிக் டொன்னுக்கும் மேல்) ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கைக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளது. கப்பலின் மின்சாரம் தடைப்பட்டதால் மீன்கள் பழுதடைந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்படி, 2022.01.13 ஆம் திகதி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், கப்பலின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த பின்னர் புறப்படுவதற்கு பதிலாக, இந்த கொள்கலன்களை இலங்கைக்கு பெற்றுக்கொண்டமையால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

அவசரநிலையின் போது கப்பலுக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு அருகிலுள்ள துறைமுகத்தில் சில வசதிகள் வழங்கப்படுகின்ற போதிலும் இலங்கை சுங்கச் கட்டளைச் சட்டத்தின்படி, “சேதமடைந்த துர்நாற்றம் வீசக்கூடிய, நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் நோயை உண்டாக்கும் மீன் வகைகள், தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் இறக்குமதி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த மீன்களை தரையிறக்கிமை மிகவும் சிக்கலுக்குரியது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பழுதடைந்த மீன்களை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது சட்டத்துக்கு முரண் என்பதால், சுங்கத்தால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சுங்க அதிகாரிகளைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்நாட்டின் கொள்வனவாளர் ஒருவரை இறக்குமதியாளராகப் பயன்படுத்தி புதிய CUSDEC அனுமதியைப் பெற்று இந்தக் கொள்கலன்களை இலங்கையில் தரையிறக்கியுள்ளதாக இதன்போது தெரியவந்தது.

எவ்வாறாயினும், சுங்கக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரையின் பேரில், இந்த மீன்களை இயற்கை உர உற்பத்திக்காக இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு அமைய பெற்றதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

102 கொள்கலன்களில் 4 அழிக்கப்பட்டதாகவும், எஞ்சிய 98 இல் 43 உரம் உற்பத்திக்காகவும், 40 மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், 15 இன்னும் நாட்டில் எஞ்சியுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது. 2023 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பௌதிக பரிசோதனையின் போது, எஞ்சியுள்ள 15 கொள்கலன்களில் பழுதடைந்த மீன்கள் அதிக துர்நாற்றம் வீசுவது அவதானிக்கப்பட்டதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இயற்கை உரம் தயாரிப்பதற்காக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மீன் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதும் பிரச்சினைக்குரியது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கப்பலொன்று ஆபத்தில் உள்ள போது உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இங்கு நடந்திருப்பது அவ்வாறானதொன்று அல்ல என்பது தெளிவாகின்றது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், சுங்க அதிகாரிகள் இலங்கைக்குள் கொள்கலன்களை கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளமை இந்த முழு செயல்முறையின் விசாரணையில் தோன்றுவதாகவும், ஏனைய நடவடிக்கைகளுக்கும் அதே ஆர்வம் இருக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...