வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூக ஊடகத்தில் பரவிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் இன்று (25) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 20ஆம் திகதி கொழும்பு பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தீ பரவியமை, உணவகத்தினுள் ஏற்பட்ட திரவ பெட்ரோலிய வாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தையில் காணப்படும் எரிவாயு சிலிண்டர்களில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதன் காரணமாக எரிவாயு கசிவு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும் சகல லிட்ரோ கேஸ் சிலிண்டர்கள் மற்றும் அதனுள் காணப்படும் எரிவாயு என்பன சர்வதேச தரத்துக்கமையவே காணப்படுவதாக குறித்த நிறுவத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன தெரிவித்துள்ளார்.
திரவ பெற்றோலிய வாயு உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.