சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இன்று காலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்பட உள்ளதாக எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பை மீறுவதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளது.
இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றதாகவும், அதற்கான பிரேரணையை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்ததன் பின்னர், பாராளுமன்ற அலுவல்கள் குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வாரத்திற்கான பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
பாராளுமன்றம் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.